புதுச்சுவடி

Name:
Location: நாஞ்சில் நாடு, India

நாஞ்சிலன்

Wednesday, January 16, 2008

வணிகன் புஷ்ஷின் வளைகுடாப் பயணம்

ந்தியக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, குஜராத்தின் முதலமைச்சர் நரேந்திரமோடியைச்'"சாவு வணிகன்"(மவுத்க சவுதாகர்) என அடைமொழியிட்டு அழைத்தார்.அது மெத்தப் பொருத்தமானதே! மோடி இந்தியாவின் சாவு வணிகன் என்றால் புஷ், "அனைத்துலகச் சாவு வணிகன்".

தம் முன்னோடிகள் வியட்னாம், லாவோஸ், கம்போடியா எனச் செய்த சாவு வணிகத்தை அடியொற்றி, புஷ் ஆப்கானிஸ்தான், இராக் எனத் தொடர்கிறார். தம் வணிகத்துக்குப் புதிய சந்தையைத் தேடப் புறப்பட்டு வந்ததே புஷ்ஷின் வளைகுடாப் பயணம்.

இம்மாதம் 11ஆம் நாள் குவைத்தில் துவங்கி, பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகங்கள் வழி நேற்று ஸவூதி அரேபியாவில் முடிந்தது புஷ்ஷின் வளைகுடாப் பயணம்.

(முஸ்லிம்களுக்கு எதிரான) சிலுவைப்போர் என ஆர்ப்பரித்து ஆப்கானிஸ்தானை அலங்கோலப் படுத்தி, பேரழிவு ஆயுதம் என அச்சுறுத்தி இராக்கை அழித்த புஷ்ஷின், 'கழுகு'ப் பார்வையில் அடுத்த குறி ஈரான்.

தம்மையும் அமெரிக்காவையும் ஒரு பொருட்டாகவே மதிக்காமல் நெஞ்சுயர்த்தி அறைகூவல் விடுக்கும் ஈரான் அரசையும் அதன் அதிபர் அஹ்மதி நிஜாத்தையும் தனிமைப் படுத்தி ஈரானையும் ஒழித்துக் கட்டி விட்டால், உலகில் எதிர்ப்புக் குரலே இல்லாமல் அமெரிக்கா ஆட்டம் போடலாம் என்பது புஷ்ஷின் திட்டமாக இருக்கலாம்.

ஈரான் அதிபராக அஹ்மதிநிஜாத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் அமெரிக்காவுக்கு முள் தைத்ததுபோல் உறுத்தியது. அண்மையில் கத்தர் நாட்டில் நடந்து முடிந்த வளைகுடா ஒத்துழைப்பு (GCC) நாடுகளின் மாநாட்டில், [வரலாற்றில் முதன் முறையாக ஈரான் அதிபர்] அஹ்மதுநிஜாத் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டது அமெரிக்காவின் உறுத்தலை அதிகப்படுத்தியது. இதைத் தொடர்ந்து ஸவூதி அரேபியாவின் மன்னர் அப்துல்லாஹ்வின் அழைப்பை ஏற்று ஹஜ்ஜுக் கடமையை நிறைவு செய்ய ஒரு பெருங்குழுவுடன் அஹ்மதிநிஜாத் ஸவூதிக்குச் சென்று வந்தது, அரபு நாடுகளுடனான ஈரானின் நெருக்கத்தையும் ஷிய்யா-ஸுன்னி வேறுபாட்டையும் மீறிய நேசத்தையும் புலப்படுத்தியது. இதை அமெரிக்க அதிபராலும் அவரது குழுவாலும் தாங்கிக் கொள்ள இயலவில்லை. இந்த ஒற்றுமையை உடைத்தலே உபாயம் எனப் புறப்பட்டு வந்தார் புஷ்.

இராக்கைத் தாக்கி அழித்த பயங்கரவாதத்துக்கெதிரான போரில் ( socalled war on terrorism)வளைகுடா நாடுகளைத் தம் பாடி வீடுகளக மாற்றினார் புஷ்.

பஹ்ரைன் நாடு கடற்படைத் தளமானது; கத்தர் விமானப் படைத் தளமானது; குவைத் தரைப்படைத் தளமானது; ஐக்கிய அரபு அமீரகங்கள் எரிபொருள் நிரப்பும் தளமானது.அதே முறையில் இப்போது ஈரானைத் தாக்க இத்தளங்களின் பயன்பாட்டை உறுதிபடுத்தவே புஷ்ஷின் பயணம்.

எடுத்தேன் கவிழ்த்தேன் என்று இராக்கில் சென்றிறங்கி முகம் கிழிக்கப்பட்டது போல இம்முறை நடந்து விடக் கூடாது என்பதில் புஷ்ஷும் அவரது அறிவுரைஞர்களும் மெத்தவே அக்கறைப்பட்டனர். ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கவில்லை என அமெரிக்க உளவாளிகள் தந்த அறிக்கையால் வேறு வழி தேடிய அவர்கள், புஷ் பயணம் துவங்கும் முன் ஒரு நாடகத்தை அரங்கேற்றினர்.

ஈரானை ஒரு "பாதுகாப்பு அச்சுறுத்தல் நாடு"(threat to security) என உலக நாடுகளின் முன் வெளிப்படுத்த ஹோர்முஸ்ஸில் (HORMUZ) அமெரிக்கப் போர்க் கப்பல்களை ஈரானின் படகுகள் வழிமறித்துக் குண்டுகள் வைத்துத் தகர்க்கப் போவதாக மிரட்டியதாக அமெரிக்கா அழுது புலம்பியது.

சிறு நகரங்கள்போல் நகரும் வலிமையான பெரிய மூன்று அமெரிக்கப் போர்க்கப்பல்களை ஈரானின் சிறிய ஐந்து விரைவுப் படகுகள் வழிமறித்துக் குண்டுகள் வைத்துத் தகர்க்கப் போவதாக மிரட்டினவாம் :-) இதுதான் பாதுகாப்பு அச்சுறுத்தலாம்.

"எங்கள் கடல் எல்லையில் வழக்கமாக நடைபெறும் நிகழ்வு; நாங்கள் கப்பல்களின் அடையாளத்தை(IDENTITY)க் கேட்பதும் அவர்கள் தம் அடையாளத்தைச் சொல்வதும் சாதாரண நடைமுறைதான். அப்படித்தான் இப்போதும் நடந்ததே தவிர நாங்கள் குண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக மிரட்டவில்லை என்பதை எங்களின் நாடாப் பதிவுகள் உறுதிப் படுத்தும்" என ஈரான் தன் பக்கத்தைத் தெளிவாக்கியது.

தொடர்ந்து சொந்த மக்களையே பொய்கூறி ஏமாற்றுவதற்காக அவர்களிடம் புஷ் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் ஈரான் அறிக்கை விட்டிருக்கிறது.

ஈரானின் கூற்றை மெய்ப்பிக்கும் வண்ணம் அமெரிக்காவின் கப்பற்படைப் பேச்சாளர் (Naval spokesman Rear Admiral Frank Throp IV), 'எங்கள் நாடாவில் பதிவான குண்டு மிரட்டல் வேறு புலத்திலிருந்தும் வந்திருக்க வாய்ப்புண்டு' என்று கூறிவிட்டார்.அமெரிக்காவின் எதிர்பார்ப்புக்கு மாற்றமாக, உலகம் அமெரிக்காவின் அழுகுணி ஆட்டத்தைப் புறக்கணித்து விட்டது.

எனினும் திட்டமிட்டபடி புஷ் வந்தார். புஷ்ஷின் வளைகுடாப் பயணத்தின் நோக்கம்:-

  1. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா போர் தொடுத்தால், அமெரிக்காவுக்கு வளைகுடா நாடுகளின் ஒத்துழைப்பை யாசிப்பது.
  2. ஈரானுக்கு அரபுலகம் அளித்து வரும் ஆதரவை முறிப்பது.
  3. வளைகுடாப் பகுதியில் ஈரானின் செல்வாக்கை ஒழிப்பது.
வளைகுடா வட்டாரத்துக்கு அச்சுறுத்தலான( regional threat) ஈரான், ஹிஸ்புல்லாஹ், ஹமாஸ், இஸ்லாமிக் ஜிஹாத் ஆகிய இயக்கங்களுக்குக் கோடிக்கணக்கான பணம் தந்து வளர்ப்பதாகக் குற்றம் சாட்டிய புஷ், மக்களாட்சியையும் உண்மையான விடுதலையையும் வெறுக்கும் இத்தீவிரவாதிகள் இஸ்லாமின் உன்னதத்தை அச்சுறுத்திக் கடத்திவிட்டதாக(hijak)கூறினார்.

புஷ் தம் ஆசையை வெளிப்படுத்தினார். ஆனால் அரபுகளின் ஆவலான, இராக் மறு சீரமைப்பு, பாலஸ்தீன முழு விடுதலை போன்றவற்றைப் பேசவில்லை.

ஈரானால் வளைகுடா வட்டாரத்துக்கு ஆபத்து எனில் நாங்கள் ஈரானுடன் பேசித் தீர்த்துக் கொள்வோம் எனத் தெளிவாக அறிவித்துவிட்ட வளைகுடா நாடுகள் அமெரிக்காவின் ஈரான் அழிப்புத் திட்டத்திற்கு ஒத்துழைக்கும் என்பது ஐயமே!

எனினும் புஷ் (அமெரிக்கா) இஸ்ரேலைத் தூண்டிவிட்டு ஈரானைத் தாக்கித் தன் சாவு வணிகத்தைத் தொடரும் வாய்ப்புண்டு.இஸ்ரேல் ஈரானைத் தாக்கினால் முஸ்லிம் நாடுகள் அமெரிக்காவின் மேல் சினமுறா; மாறாக இஸ்ரேலைக் கட்டுப்படுத்த அமெரிக்காவையே நாடும் என்பதும் ஓர் அரசியல் விளையாட்டே!

இராக், அடுத்து ஈரானையும் ஒழித்து விட்டால் வளைகுடா நாடுகளை எதிர்ப்பே இல்லாமல் எளிதில் வளைத்துவிடலாம் என்பது அமெரிக்காவின் தொலைநோக்குத் திட்டம். ஏனெனில் அவர்களின் குறி எண்ணெய்யே!

Sunday, November 26, 2006

பதிவில் நேர்மை வேண்டும்

மூன்று பதிவுகள் போட்டால்தான் தமிழ்மணம் திரட்டுமாம்.

அதற்காக வேண்டி இந்த நேர்மையான பதிவு.

யாராவது இதைக் கயமைப் பதிவு என்று கயமைத் தனம் செய்தாலும் எனக்குக் கவலை இல்லை!

இறையடியார்களுக்கு...

இறையடியான் என்ற பெயரில் இணையத்தில் எழுதும் சகோதரர் ஒருவர் அண்மையில் இராமாயணம் பற்றிப் பதிவொன்று இட்டிருந்தார். இந்துத்துவ வெறியர்களின் பதிவுகளின் எதிர்வினைப் பதிவாக இருந்தாலும் அதில் இராமாயணத்தில் வரும் கதை மாந்தர்களின் பெயர்களையும் சில கதை நிகழ்வுகளையும் பொருத்தமற்று எழுதிக் குழப்பியிருந்தார்.

அதற்கு எதிர் வினையாக, ஜெயராமன் எனும் பதிவர் 'இஸ்லாமிய ராமாயணம்' என்ற தலைப்பில் ஒரு மறு கட்டுரை வெளியிட அதில் வழக்கம்போல் இந்துமதத் தீவிரவாதிகள் இஸ்லாமின் மீதும் முஸ்லிம்களின் உயிரினும் மேலான, அல்லாஹ்வின் தூதர் மீதும் புழுதியும் சேறும் வாரி வீசியிருந்தனர்.

இந்நிலை யாரால் ஏன் ஏற்பட்டது?

சிந்தித்துப் பார்த்தால் தவறு இறையடியான் என்ற வலைப் பதிவரிடம் என்பது புரியும்.

சினமோ சீற்றமோ கொள்ளாது காய்தல் உவத்தல் இன்றிச் சிந்தித்துப் பார்த்தால் என் கூற்றில் உள்ள உண்மை யாவருக்கும் புரியும்.

இராமாயணம் என்பது இந்தியாவின் சிறந்த காப்பியம். வால்மீகி இராமாயணம், துளஸி இராமாயணம், ஆனந்த இராமாயணம் போன்று கம்பன் எழுதிய இராமாயணம் தமிழ் மொழியின் மிகச்சிறந்த காப்பியம். அதன் மொழியழகும் கவிதைச் சிறப்பும் தமிழர்கள் யாவராலும் போற்றப் படும். இராமாயணத்தின் கதைப் பொருளின் மீது பகுத்தறிவாளர்கள், திராவிடர் கழகத்தினர், கிருத்துவர் மற்றும் முஸ்லிம்கள் ஆகியோருக்கு மாற்றுக் கருத்தும் விமர்சனமும் இருக்கலாம். அதை வெளிப்படையாக எழுதவும் செய்யலாம். அதில் தவறில்லை. அல்லாஹ்வின் அருள் மறையையே விமர்சனத்துக்கு உள்ளாக்கும் உரிமை உள்ள இவ்வுலகில் ஓர் இலக்கிய நூலை விமர்சிப்பதில் தவறேயில்லை.

ஆனால் ஒரு நூலை விமர்சிக்கப் புகுமுன், குறைந்த அளவு அதன் உள்ளடக்கம் என்ன? அதன் கதை மாந்தர்கள் யாவர்? அவர்களுக்குள் என்ன உறவு அல்லது தொடர்பு என்பதையாவது அறிந்திருக்க வேண்டாமா? பள்ளிக் கல்வியிலேயே இராமாயணம் தேர்வுக்குரிய பாடமாக வைக்கப் பட்டுள்ளது. சாதாரண எட்டாம் வகுப்பு மாணவனுக்குத் தெரிந்திருக்கும் ஒரு தகவல் இணையத்தில் வலைப் பதிவு செய்யும் ஒருவருக்குத் தெரியவில்லை என்றால் நம்ப முடியவில்லை.

இறையடியான் எவ்வித ஆய்வும் தெளிவுமின்றிப் பதித்த ஒரு பதிவினால் தமிழ் முஸ்லிம்கள் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் கைபிசைந்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, வலையில் பதியும் இறையடியார்களே! உங்கள் சிந்தனைக்குச் சில..

இணையத்தில் ஓர் ஆக்கத்தைப் பதிவேற்ற எண்ணினால் அதற்கு முழு வடிவம் கொடுத்தபின் ஒரு முறைக்கு இருமுறை படித்து வேண்டிய திருத்தங்கள் செய்து பதிக்க வேண்டும். அதுவும் மேற்படியார் பதிந்துள்ளபடி விவாதத்துக்குரிய செய்திகளை மிகவும் கவனத்துடன் ஆதாரங்களைத் தேடிப் படித்துப் பின் பதிக்க வேண்டும். நாம் விமர்சிக்கப் புகும் நூலில் இருந்து அகச்சான்றுகள், அதற்கு வலுவேற்றும் புறச்சான்றுகள், பிற ஆய்வு நூலாதாரங்கள், வரலாற்று மற்றும் தொல்லியல், மானுடவியல் ஆதாரங்கள் இருப்பின் அவை என இப்படி எவையெல்லாம் நம் வாதங்களை வலுவேற்றுமோ அவை எல்லாம் தேடப்பட வேண்டும். சான்றாக, பாப்ரி மஸ்ஜித் விஷயமாக எழுதப் புகுந்தால் மேம்போக்காக எழுதாமல் மேற்சொன்ன அனைத்துவகைச் சான்றுகளையும் தரவுகளையும் தொகுத்து எழுதினால் அதன் பொலிவே தனிதான்.

ஆனால் அப்படி எந்த முயற்சியிலும் ஈடுபட்டதாக இறையடியானது எழுத்திலிருந்து புலப்படவில்லை. எந்த நூலையும் ஆய்வு நோக்கில் படித்து எழுதியதாகவும் தெரியவில்லை. எதோ ஒரு நூலை அவசரமாகப் படித்து அல்லது ஓர் ஒலிநாடாவைக் கேட்டு அல்லது கேட்டவர் சொல்லக் கேட்டு அவசரமாகப் பதித்து 'பேஸ்த்' ஆகி நிற்கிறார் என்றுதான் தோன்றுகிறது.

இதைத்தான், "தடி கொடுத்து அடி வாங்குவது" என்பர்.

"கழுத்துப் பிடி கொடுத்தாலும் எழுத்துப் பிடி கொடுக்கக் கூடாது." இவரது சறுக்கலை வைத்தே ஜல்லியடித்துள்ள கூட்டம் இதை மெய்ப்பித்துவிட்டது.

பிறர் கடவுளாக எண்ணி வணங்குபவர்களைத் திட்டாதீர்கள்; இதன் மூலம் அவர்கள் அறிவின்றி அல்லாஹ்வைத் திட்டுவார்கள் என்று அல்லாஹ் தன் அருள்மறையில் சொன்னதற்குச் சரியான சான்றாகி விட்டார் இறையடியான்.

ஒரு கருத்தைச் சொன்னால் எதிரி வாயடைக்கும் வண்ணம் சொல்ல வேண்டும்.

மாறாக, அரைகுறைச் செய்திகளுடன் பதிவிட்டால் இந்துத்துவ வெறியர்களிடம் இப்போது வாங்கிக் கட்டிக் கொண்டதைப்போல் வாங்க வேண்டிய நிலைமை வரலாம்.

நாம் விமர்சிக்கும் எதிரிகள் நம்மைவிடப் புத்திசாலிகள் என்ற எண்ணம் இருந்தால்தான் வாதங்களில் தெளிவும் வலுவும் ஏற்படும். மத்ஹபு, தர்கா, தரீக்கா என மேம்போக்காக வாதிடுவதுபோல் எண்ணி, அள்ளித் தெளித்த அவசரக் கோலம் அலங்கோலப் பட்டுவிட்டது.

எழுத்தில் சூடு இருப்பதை விடத் தேவையானது மறுக்கவியலா ஆதாரம். காளையொன்று கன்றீன்றது எனக் கூறக் கேட்டால் கறப்பதற்குச் சொம்புடன் ஓடக்கூடாது.

"நீங்கள் அறியாதவர்களாயிருந்தால் அறிந்தவர்களிடம் கேளுங்கள்" என்று அல்லாஹ் தன் அருள் மறையில் கூறுகின்றபடி, நீங்கள் எழுத விரும்பும் செய்தி பற்றி மேல் விபரங்களை, அதுபற்றி அறிந்தவர்களிடம் கேட்கலாம்; முழுவடிவம் கொடுக்கும் முன் அத்தகைய அறிஞர்களிடம் காட்டலாம்.

பொதுவாக இணைய விவாதங்களில் ஈடுபடுவதற்கு முன்னால் அந்தக் குறிப்பிட்ட தளம், மன்றம், அரங்கம் பற்றியும் அங்குள்ள விதிகள் பற்றியும் தெரிந்து கொள்வது நலம். இல்லையேல், மூக்கறுப்புக்கு உள்ளாகும் வாய்ப்பு உண்டு என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு விஷயத்தைப் பொதுவில் கொண்டு செல்லும் முன் இதனால் சமுதாயத்திற்கு ஏதேனும் நன்மையா என்பதை முதலில் சிந்தித்துப் பார்த்துவிடுவது நலம்.

இரண்டாவதாக, கொண்டு செல்லும் குறிப்பிட்ட அந்த இடமும் சூழ்நிலையும் அதற்கு ஏற்றவையா என்பதையும் முடிவு செய்யவேண்டும்.

எதிர்வினைகளை எதிர்கொள்ளத் தெரிந்திருப்பதோடு மட்டுமின்றி, அதற்கான நேரம் ஒதுக்கும் வாய்ப்பு தமக்கு இருக்கிறதா என்பதை முடிவு செய்த பின்னரே இதுபோன்ற விவாதங்களில் ஈடுபடுவது நலம்.

ஏதாவது ஓர் அறிஞரின் கருத்தைத் தம் ஆக்கத்தில் மேற்கோளிட்டுவிட்டு, எதிர்வினை வரும்போது இதற்கு நான் முழுதும் உடன்படவில்லை என்றோ அல்லது அந்த அறிஞரிடம்தான் கேட்க வேண்டும் என்றோ சொல்வதற்குரிய சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ளாமல், தாமே எதிர்வினைகளை எதிர்கொள்வதற்காக, உடன்பாடான, தெரிந்த நல்ல விஷயங்களை வெளிப்படுத்துவதே நல்லது.

இணையதளத்தில் இதன் குறிப்புகளோ அல்லது மூலமோ இருக்குமாயின், அவசியம் சுட்டி கொடுக்கப்பட வேண்டும்.

எழுத்துநடை எளிமையாகவும் தெளிவாகவும் அமைய வேண்டும். எனக்கு எல்லாம் தெரியும் என்று காட்டுவதற்காகப் பாமர வாசகனுக்கு எளிதில் புரியாத பெரிய பெரிய சொற்களைப் போட்டு மிரட்டக்கூடாது. கூறியது கூறல் கூடாது. சுருங்கச் சொல்லி விளங்க வைக்க வேண்டும். அதற்காகக் குன்றக் கூறவும் கூடாது; மிகைப் படுத்தவும் கூடாது. சொல்ல வந்த செய்தியை விட்டுவிட்டு வேறொரு செய்திக்குத் தாவவும் கூடாது.

சுருங்கக் கூறின், ஓர் ஆக்கம் என்பது, 'மனித குலத்தின் மேன்மைக்கும் அமைதிக்கும் உரிய வழி'யின்அழைப்பாக இருக்க வேண்டும்.

Sunday, March 05, 2006

முதலேடு

புதுச்சுவடியின் முதலேடு....

அங்கம், வங்கம், கலிங்கம், காம்போஜம், மாளவம், கூர்ச்சரம்,காஷ்மீரம், எனத் தொடங்கிச் சோழ, பாண்டிய மண்டலங்கள் வரை "அம்பத்தாறு" தேசங்களாய்ச் சிதறிக் கிடந்தவற்றை 'ஹிந்துஸ்தான்' என ஒன்றாக்கி ஆண்டவர்கள் முகலாய மன்னர்களே!
இறுதியாக அவர்களிடமிருந்துதான் ஆங்கிலேயன் 'இந்தியா'வைக் கைப்பற்றினான்.

நம் மாபெரும் தேசத்தைக் கட்டமைத்து, சட்ட நெறிமுறைகளையும் நிர்வாக முறைகளையும் உருவாக்கி, நிலவரி, மற்றும் பிற இன வருவாய் வகைகள் திரட்டிப் பங்கிடும் வழிகளையும் தந்தவர்கள் முகலாய மன்னர்களே என்பதை இன்று நம் நாட்டில் இருக்கும் வருவாய்த் துறை காட்டிக் கொண்டிருக்கிறது.

தாலுக், தாசில், மகஸுல், முன்ஸிஃப், போன்ற அரபுச் சொற்கள், ஜில்லா, பசலி, பர்வர்த்திகார் போன்ற உருதுச் சொற்கள் முகலாய மன்னர்கள் இந்நாட்டு நிர்வாகத்துக்குத் தந்தவையே. அவற்றைப் பற்றிப் பிறிதொரு வாய்ப்பில் பேசலாம்.

தமிழ் நாட்டில் தேர்தல் திருவிழா வந்துவிட்டது. இனிச் செவி பிளக்கும் பேரோசையில் ஒலிபெருக்கி வழியாக நம் அரசியல் தலைவர்களின் 'தெள்ளு தமிழ்ச் சொற்பொழிவு'கள் நம்மைத் தாக்கும்.

"தமிழே என் மூச்சு" என்றும் "அன்னைத் தமிழுக்காக இன்னுயிரைத் தருவேன்" என்றும் மேடைகளில் முழங்குகின்ற முது மூத்த தமிழ்க் காவலர்கள், தம் இல்லக் குழந்தைகளை ஆங்கில வழிப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சேர்த்து இந்தி, ப்ரென்ச், ஜெர்மன் போன்ற மொழிகளைக் கற்க வாய்ப்பளித்து விட்டுப் பாமரன் முன்னே தமிழ் முழக்கம் செய்கின்ற தமிழினத் தலைவர்கள், குடும்பத்தவரிடையே தெலுங்கில் பேசிக் கொண்டு மேடைகளிலே தமிழுக்கும் உலகத் தமிழர்க்கும் தம் வாழ்வையே ஈயப் போவதாகச் சபதம் செய்யும் அரசியல் வாதிகள், மக்களின் பெயர்களையும் திரைப் படங்களின் பெயர்களையும் நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளையும் தமிழ்ப் படுத்துவதாகப் பெரும் ஆர்ப்பாட்டத்துடன் விளம்பரம் செய்யும் தமிழகத் தலைவர்கள் அனைவரும் மேடைகளில் வாரிக் கொட்டுகின்ற அத்தனைச் சொற்களும் தமிழ்ச் சொற்கள்தாமா?

நம் (தமிழ்) அரசியல்வாதிகளின் மொழிப் பற்றில் சற்று இங்குப் பார்ப்போமா?

தங்களது கழகத் தோழர்களை நகரின் 'மைதானம்' நோக்கி அழைப்பர்.

தேர்தலுக்காக நிதி ' வசூல்' செய்யும்படித் தம் தோழர்களை ஏவுவர்.

'அசல்' வக்காளர் பட்டியலை ' நகல்' எடுக்கும்படி உத்தரவிடுவர்.

தேர்தலில் போட்டியிட வேட்பு மனு 'தாக்கல்' செய்வர்.

வாக்கெடுப்பு நெருங்கி வந்தால் 'நபரு'க்கு இவ்வளவு எனத் தொகை தருவர்.

தேர்தல் நிதியில் 'பாக்கி' ஒன்றுமில்லை எனக் கைவிரிப்பர்.

எதிக் கட்சியினர் 'அத்து' மீறுவதாகக் குற்றம் சுமத்துவர்.

தாங்கள் தேர்தலில் வென்றால் எதிக்கட்சி வரிசை 'காலி'யாகவே இருக்கும் என்று நம்பிக்கை தெரிவிப்பர்.

தாம் அரியணையில் அமர்ந்ததும் பழைய சட்டங்களை 'ரத்து'ச் செய்து விட்டுப் புதிய சட்டங்களை 'அமுல்' படுத்துவோம் என்று உறுதியளிப்பர்.

எதிர்க் தரப்பினரின் குற்றச் சாட்டுக்குத் தகுந்த ' பதில்' உரிய நேரத்தில் தரப்படும் என்பர்.

ஊழல் வாதிகளுக்கு எதிர் தரப்பினர் 'வக்காலத்து' வாங்குவதாகக் கூக்குரலிடுவர்.

தம் தலைவரை 'நக்கல'டிப்பதாகக் கூப்பாடு போடுவர்.

தங்கள் மீதுள்ள குற்றச் சாட்டுகளை நிரூபிக்க முடியுமா எனச் 'சவால்' விடுவர்.

எதிர் 'தரப்பு' ஊழல் வாதிகளை நீதி மன்றத்தில் 'ஆஜர்'ப் படுத்துவோம் என்பர்.

திறமையான 'வக்கீல்' வைத்து வாதாடினாலும் அவர்களுக்கு 'வாய்தா' கூடக் கிடைக்காது எனக் கூறி எரிச்சல் மூட்டுவர்.


இவை அனைத்தும் அரபு மொழிச் சொற்கள்.


தேர்தல் நாள் நெருங்கும்போது வேட்பு மனுவை ' வாபஸ்' வாங்குவர்.

எதிர்க் கட்சியினர் 'பெட்டி பெட்டி'யாய்ப் பணம் இறக்குவதாகப் புலம்புவர்.

தாங்கள் தோற்றாலும் 'பரவாயில்லை' மக்கள் பணியிலிருந்து மாற மாட்டோம் என்று கூறி மன்றாடுவர்.

இவை உருது மொழிச் சொற்கள்.


இவர்கள் பயன்படுத்தும் சொற்களுக்கான தமிழ்ச் சொற்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

மொழி என்பது எண்ணங்களை வெளிப்படுத்தும் கருவி மட்டுமே. இன்றைய அறிவியல் உலகில் மொழிப் பற்று என்று பேசிக் கொண்டு மக்களை ஏய்த்துக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளின் உண்மையான வடிவைக் காட்டத்தான் இப்பதிவு.

வேற்றுமொழி--->தமிழ்
மைதானம்--->திடல்
வசூல்--->திரட்டல்
அசல்--->உண்மை
நகல்--->படி
தாக்கல்--->உள்ளிடல்
நபர்--->ஆள்
பாக்கி--->மீதி
அத்து--->எல்லை
காலி--->வெற்றிடம்
ரத்து--->விலக்கு
அமுல்--->நடைமுறை
பதில்--->மறுமொழி
வக்காலத்து--->சார்பாய் (நிற்றல்)
நக்கல்--->போலச் செய்தல்
தரப்பு--->அணி
சவால்--->அறைகூவல்
ஆஜர்--->வருகை
வக்கீல்--->வழக்குரைஞர்/ வழக்கறிஞர்
வாய்தா--->வாக்குறுதி
வாபஸ்--->திரும்பப் பெறல்
பெட்டி--->பேழை